1807.நிழல் பிரிந்தன குடை; நெடுங் கண் ஏழையர்
குழல் பிரிந்தன மலர்; குமரர் தாள் இணை
கழல் பிரிந்தன; சினக் காமன் வாளியும்
அழல் பிரிந்தன; துணை பிரிந்த, அன்றிலே.

     குடை- குடைகள்; நிழல் பிரிந்தன- நிழல் செய்தலைக் கைவிட்டன;
நெடுங்கண் ஏழையர்  குழல் - நீண்ட கண்ணை  உடைய  மகளிர்
கூந்தல்கள்;  மலர்பிரிந்தன - மலர் சூடுதலை விட்டன;  குமரர்தாள்
இணை கழல்  பிரிந்தன -
வீரர்களது  அடிகள் கழல் அணிதலைக்
கைவிட்டன;  சினக் காமன் வாளியும் - கோபம் உடைய மன்மதனது
மலர் அம்புகளும்; அழல் பிரிந்தன - காம வெப்பத்தை உண்டாக்குதலை
ஒழித்தன; அன்றில் - (என்றும் பிரியாது  ஒன்றியிருக்கும்) அன்றிற்
பறவைகள்; துணை பிரிந்த- தம் துணையைப் பிரிந்து தனித்திருப்பவாயின.

     இராமனது  பிரிவு உயிரினங்கள் இன்பத்தை இழக்கச்செய்தபடி.
யாரும் குடைபிடித்துச் செல்வது இல்லை ஆதலின் குடை நிழல் பிரிந்தன
என்றார்.யாரும் வேட்கை உற்றிலர் என்பதனை மன்மதன்வாளி வெப்பத்தை
விட்டது  என்பதால் உணர்த்தினார். ‘ஏ’ காரம் ஈற்றசை.             202