1809. | முழவு எழும் ஒலி இல; முறையின் யாழ் நரம்பு எழ எழும் ஒலி இல; இமைப்பு இல் கண்ணினர் விழவு எழும் ஒலி இல; வேறும் ஒன்று இல, அழ எழும் ஒலி அலது - அரச வீதியே. |
அரச வீதி - அரசர்களுக்குரிய வீதிகள்; முழவு எழும் ஒலி இல - தண்ணுமையிலிருந்து உண்டாகும் ஒலிகள் இல; முறையின் - இசை முறைப்படி; யாழ் நரம்புஎழ - யாழின் கண் நரம்பு எழுப்ப; எழும் ஒலி இல - எழுகின்ற ஒலிகள் இல; இமைப்பு இல் கண்ணினர் - இமையாக் கண்ணினராய தேவர்களது; விழவு -விழாவிற்காக; எழும் ஒலி இல - உண்டாகின்ற ஒலிகளும் இல; அழ எழும் ஒலி அலது வேறும் ஒன்று இல - அழுவதனால் உண்டாகின்ற கூக்குரல் ஓசை அல்லாமல் வேறு ஓர் ஒலிஇலவாயின. முழவு - மத்தளம். தண்ணுமை குடமுழா என்பன ஒரு நிகரன. முறை என்பது பண்ணாகும்.தேவர்களுக்குச் செய்யும் திருவிழாக்களும் நின்று போயின. கேட்க வேண்டிய ஓசைகள்கேட்கவில்லை; கேட்கத் தகாத ஓசை மட்டுமே கேட்டது. 204 |