சீதை இராமனை வினாவுதல் 1820. | எழுந்த நங்கையை, மாமியர் தழுவினர்; ஏங்கிப் பொழிந்த உண் கண் நீர்ப் புதுப் புனல் ஆட்டினர்; புலம்ப, அழிந்த சிந்தையள் அன்னம், ‘ஈது இன்னது’ என்று அறியாள்; வழிந்த நீர் நெடுங் கண்ணினள், வள்ளலை நோக்கி, |
எழுந்த நங்கையை - (கணவனை நோக்கி) எழுந்த சீதையை; மாமியர் -; தழுவினர் - தழுவிக்கொண்டு; ஏங்கி - அவலித்து; பொழிந்த உண்கண் நீர்ப்புதுப்புனல் ஆட்டி - சிந்திய மையுண்ட கண்களிலிருந்து வரும் நீராகிய புதிய நீரில்நீராட்டி; புலம்ப - வருந்த; அழிந்த சிந்தையள் அன்னம் - அதனால்கெட்டழிந்த மனம் உடையளாய சீதை; ஈது இன்னது என்று அறியாள் - இதற்குக்காரணம் இன்னது என்று அறியாதவளாய்; வழிந்த நீர் நெடுங் கண்ணினள் - வழிகின்ற நீரினை உடைய நீண்ட கண்களோடு; வள்ளலை நோக்கி - இராமனைப் பார்த்து, இதுகாறும் அழுகையை அறியாதவர் அழுத கண்ணீராதலின் ‘புதுப்புனல்’ என்றார். இது குளகச்செய்யுள். 215 |