சீதை மரவுரி அணிந்து இராமன்பால் வந்து நிற்றல் 1829. | அனைய வேலை, அக மனை எய்தினள்; புனையும் சீரம் துணிந்து புனைந்தனள்; நினைவின், வள்ளல் பின் வந்து, அயல் நின்றனள்- பனையின் நீள் கரம் பற்றிய கையினாள். |
அனைய வேலை - அப்பொழுது; அகமனை எய்தினள் - மாளிகைக்குள்ளேசென்றாள்; புனையும் சீரம் - உடுத்தற்குரிய மரவுரியை; துணிந்து - (செய்யத்தக்கது இதுதான் என எண்ணி) உறுதிசெய்துகொண்டு; புனைந்தனள் - உடுத்திக் கொண்டு; நினைவின் - உடன் போம் கருத்தோடு; வள்ளல் பின் வந்து - இராமனுக்குப்பின்புறமாக வந்து; அயல் - அருகிலே; பனையின் நீள்கரம் பற்றிய கையினாள் - பனைபோன்று நீண்ட இராமனது கையைப் பற்றிக் கொண்ட செயலினளாய்; நின்றனள்- ‘நினைவின்’ என்பதற்கு நினையும் மாத்திரத்து எனக் கூறி, இராமன் சிந்திக்குமளவிலேயேஅவ்வளவு விரைவாக மரவுரி உடுத்தி அயல் வந்து நின்றாள் எனலும் ஆம். கையினள் - செயலினள்(கை - செய்கை) எண்ணல், துணிதல், செய்தல் மூன்றும் பிராட்டியிடத்து விரைந்து நிகழ்ந்தன. 224 |