தாய்மார் ஆசிகூறல்  

1838.ஏத்தினார், தம் மகனை, மருகியை;
வாழ்த்தினார், இளையோனை; வழுத்தினார்,
‘காத்து நல்குமின், தெய்வதங்காள்!’ என்றார்-
நாத் தழும்ப அரற்றி நடுங்குவார்.

     நாத் தழும்ப - நா காய்ப்பு ஏறும்படி; அரற்றி - அழுது;
நடுங்குவார் - நடுங்கும் அத்தாயர்; தம் மகனை,  மருகியை - தம்
மகனாகிய இராமனையும்  மருகியாகியசீதையையும் ; இளையோனை -
இலக்குவனை;  வாழ்த்தினார் - வாழ்த்தினார்கள்; ஏத்தினார் -
புகழ்ந்தார்கள்; வழுத்தினார் - துதித்தார்கள்;  ‘காத்து நல்குமின்
தெய்வதங்காள்!’ -
காப்பாற்றிக் கொடுங்கள் தெய்வங்களே;’  என்றார்-.

     மூவரையும் வாழ்த்தினர் என இயைக்க - தெய்வங்களை வழுத்தினார்
என இயைக்க. தானாக முன்வந்து  வனம் செல்லும் இளையோனை
வழுத்தினர் அல்லது  ஏத்தினர் எனல் சிறப்பு.                      233