1844. | அந்தியில் வெயில் ஒளி அழிய, வானகம், நந்தல் இல் கேகயன் பயந்த நங்கைதன், மந்தரை உரை எனும் கடுவின் மட்சிய சிந்தையின் இருண்டது, செம்மை நீங்கியே. |
வானகம் - ஆகாயம்; அந்தியில் - மாலைக் காலத்தில்; வெயில் ஒளி அழிய - சூரியனது ஒளி இல்லாமற் போக; நந்தல் இல் - கெடுதல் இல்லாத; கேகயன் பயந்த நங்கைதன் - கேகய நாட்டரசன் புதல்வியாகிய கைகேயியினுடைய; மந்தரை உரை எனும் கடுவின்- மந்தரைக் கூனியின் வார்த்தை என்னும் நஞ்சால்; மட்கிய -மங்கிப் போன (நிலை கெட்ட); சிந்தையின் - மனம் போல; செம்மை நீங்கி -செம்மைத் தன்மை போய்; இருண்டது - இருளடைந்தது. கூனி வார்த்தையால் நெறிகெட்ட கைகேயியின் இருளடைந்த மனம் போல வானம் செம்மைநீங்கி, ஒளி குன்றி இருளடைந்தது என்றார். அங்கே இருள் - வஞ்சனை, செம்மை - நேர்மை. வானத்தின் செம்மை செவ்வானத்தின் செம்மை - எனக் கொள்க. ‘ஏ’ காரம் ஈற்றசை. 5 |