1852.மாக மணி வேதிகையில், மாதவி செய் பந்தர்.
கேகய நெடுங் குலம் எனச் சிலர்  கிடந்தார்;
பூக வனம் ஊடு, படுகர்ப் புளின முன்றில்,
தோகை இள அன்ன நிரையின் சிலர் துயின்றார்.

     சிலர் - சில மகளிர்; மாதவி செய்பந்தர் - குருக்கத்திக் கொடியால்
அமைக்கப் பெற்ற பந்தரில்;  மாக மணி வேதிகையில் - ஆகாயத்தைப்
போன்ற நீலமணிகளால் அமைந்த திண்ணையில்;  கேகய நெடுங்குலம்
என
- மயிலின் பெருங்கூட்டம்போல; கிடந்தார் - உறங்கினார்;  சிலர் -
சில மகளிர்;  பூக வனம் ஊடு- கமுகங்காட்டின் இடையே;  படுகர் -
மடுவிடத்தில்;  புளின முன்றில் -மணல்மேடுகளில்;  தோகை இள
அன்ன நிரையின் -
தோகையுடைய இளைய அன்ன வரிசைகளைப் போல;
துயின்றார் - தூங்கினார்.

     சிலர் மயில்போல,  சிலர் அன்னம் போல உறங்கினர்.  நீலமணித்
திண்ணையில்உறங்கியவர் நீல நிற மயில் போன்றார் என்றும்,
வெண்மையான மணல் மேடுகளில்உறங்கியவர்கள் வெள்ளையான
அன்னம் போன்றார் என்றும்  கூறியது.  ஒரு நயம்.  வேதிகை -திண்ணை.
பூகம் - கமுகு.  புளினம் - மணல்மேடு.                             13