| 1850. | ‘ “தாருடை  மலரினும் ஒதுங்கத் தக்கிலா  வாருடை முலையொடும், மதுகை மைந்தரைப்  பாரிடைச் செலுத்தினேன், பழைய நண்பினேன்,  தேரிடை வந்தனென், தீது இலேன்” என்கோ? |  
      ‘பழைய நண்பினேன் - நெடுங்கால நண்பனாகிய யான்; தார் உடை  மலரினம்ஒதுங்கத் தக்கிலா - மாலையாகத் தொடுக்கும் மலரினும்  நடப்பதற்குத் தகுதியில்லாத; வாருடை முலையொடு - கச்சணிந்த  நகிலாளாகிய சீதையோடு;  மதுகை மைந்தரை -வலிமையுடைய  குமாரர்களை;  பாரிடை - காட்டு நிலத்தில்;  செலுத்தினேன் -(நடந்து  செல்லுமாறு) அனுப்பிவிட்டேன்; தீதிலேன் - ஒரு தீமையும் இல்லாதவனாய்;  தேரிடை வந்தனன் என்கோ?’- தேர் மேலே ஏறி ஊர் வந்து சேர்ந்தேன்  என்றுசொல்வேனோ?      சீதையின் மென்மைத்தன்மையை ‘மலரினும் நடத்தற்கு வருந்தும்’  என்பதால் கூறினார். ‘தேரிடை வந்தனன்’ என்பது  அவர்களை நடக்க  வைத்து’ என்னும் குறிப்பு உணர்த்திற்று.                            21  |