1862.‘ “நால் திசை மாந்தரும்,
     நகர மாக்களும்,
தேற்றினர் கொணர்வர் என்
     சிறுவன் தன்னை” என்று
ஆற்றின அரசனை,
     ஐய! வெய்ய என்
கூற்று உறழ் சொல்லினால்,
     கொலை செய்வேன்கொலோ?

     ‘ஐய! - இராமனே;  ‘நால்திசை மாந்தரும் - நான்கு திசைகளிலும்
உள்ளமனிதர்களும்; நகர மாக்களும் - நகர மக்களும்; ‘உன் சிறுவன்
தன்னை -
(தசரதனே!) உன் மகனை; தேற்றினர் கொணர்வர்’- அழைத்து
வருவர்’ என்று -; ஆற்றின அரசனை - (உயிர் நீங்காதபடி) ஆறுதல்
கூறிக் காத்த அரசனை; என் -என்னுடைய; கூற்று உறழ் சொல்லினால்-
இயமனை ஒத்த கொடிய வார்த்தையால்; கொலை செய்வேன்கொலோ?! -
உயிர் நீங்குமாறு செய்து விடுவேனோ.’

     அனைவரும் அரசனைத் தேற்றியிருப்ப நான் நீ காடு சென்ற செய்தி
கூறி அவனுயிரைஅழிக்கின்றவ னாய்விடுவேனோ  என அஞ்சுகிறான்.   23