1888. | மருமத்துத் தன்னை ஊன்றும் மறக் கொடும் பாவம் தீர்க்கும் உரும் ஒத்த சிலையினோரை ஒருப்படுத்து உதவி நின்ற கருமத்தின் விளைவை எண்ணிக் களிப்பொடு காண வந்த தருமத்தின் வதனம் என்னப் பொலிந்தது - தனி வெண் திங்கள். |
தன்னை - (தருமமானது) தன்னை; மருமத்து - உயிர் நிலையில்; ஊன்றும் - தாக்குகின்ற; மறக் கொடும் பாவம் - கொலைத் தன்மை உடைய கொடிய பாவத்தை; தீர்க்கும் - அழிக்கின்ற; உரும் ஒத்த சிலையினோரை - இடியைஒத்த வில்லை உடையவர்களாய இராம இலக்குவர்களை; ஒருப்படுத்து - (காட்டிற்கு வருமாறு)உடன்படுத்தி; உதவி நின்ற - தனக்கு உதவிசெய்து நின்ற; கருமத்தின் விளைவை எண்ணி - நல்வினைப் பயனை மனத்தின்கண் கருதி; களிப்பொடு - மகிழ்ச்சியோடு; காண வந்த - அவர்களைப் பார்ப்பதற்கு வந்த; தருமத்தின் வதனம் என்ன - தருமதேவதையின் முகம் போல; தனி வெண் திங்கள் - ஒப்பற்ற வெண்மையான சந்திரன்; பொலிந்தது - விளக்கியது. அரக்கரை அழித்துத் தன்னைக் காக்க வந்த இராம இலக்குவர்களைக் காண வந்த தருமதேவதையின் முகம் போலச் சந்திரன் பிரகாசித்தான் என்றது தற்குறிப்பேற்றவணி.அரக்கர்க்குப் பயந்து இதுகாறும் ஒளிந்திருந்த தரும தேவதை தனக்கு உதவி செய்வார் வந்தபடியால்அவர்களைக் காண முகம் காட்டியது என்றார். மருமம் - உயிர்நிலை - தருமத்தின் ஆணிவேரையேஅழிக்கிறவர் அரக்கர் என்பதாம். 49 |