சுமந்திரன் வசிட்டனை காணுதல்  

1893.கடிகை ஓர் இரண்டு மூன்றில்,
     கடி மதில் அயோத்தி கண்டான்;
அடி இணை தொழுதான், ஆதி
     முனிவனை; அவனும், உற்ற
படி எல்லாம் கேட்டு, நெஞ்சில்
     பருவரல் உழந்தான்; முன்னே
முடிவு எலாம் உணர்ந்தான், ‘அந்தோ!
     முடிந்தனன், மன்னன்’ என்றான்.

     கடிகை ஓர் இரண்டு மூன்றில் - ஐந்து  நாழிகைப் போதில்;
கடிமதில்அயோத்தி கண்டான் - காப்பமைந்த மதிலையுடைய அயோத்தி
நகரத்தை அடைந்து;  ஆதிமுனிவனை - வசிட்டனை; அடி இணை
தொழுதான் -
பாதத்தில் வணங்கினான்;  அவனும்- வசிட்ட முனிவனும்;
உற்றபடி எலாம் கேட்டு - வனத்தில் நடந்தவையெல்லாம்கேட்டறிந்து;
நெஞ்சில் பருவரல் உழந்தான் - மனத்தில் துக்கம் கொண்டு வருந்தி;
முன்னே முடிவு எலாம் உணர்ந்தான் - இனி வரப் போவதை எல்லாம்
உணர்ந்தவனாய்;  ‘அந்தோ முடிந்தனன் மன்னன்’ என்றான் - ஐயோ!
அரசன் இறந்து போனான் என்றான்.

     இராமன் திரும்பாமல் வனம் சென்றுவிட்டான் என்ற செய்தியைச்
சுமந்திரன் மூலம் அறிந்த வசிட்டன் ‘இனி அரசன் இறந்து போவது உறுதி’
என்கின்ற கருத்தில்‘முடிந்தனன் மன்னன்’ என்றான். ‘தெளிவின்கண்
எதிர்காலம் இறந்தகாலம் ஆயிற்று; காலவழுவமைதி. ஐந்து நாழிகை இரண்டு
மணி.  கடிகை - நாழிகை.                                       54