1895. | ‘தேர் கொண்டு வள்ளல் வந்தான்’ என்று தம் சிந்தை உந்த, ஊர் கொண்ட திங்கள் என்ன மன்னனை உழையர் சுற்றிக் கார்கொண்ட மேனியானைக் கண்டிலர்; கண்ணில், வற்றா நீர்கொண்ட நெடுந் தேர்ப் பாகன் நிலை கண்டே, நிலையின் தீர்ந்தார். |
உழையர் - மந்திரிமார்; வள்ளல் தேர்கொண்டு வந்தான் என்று தம் சிந்தைஉந்த - இராமன் தேர்மீது ஏறித் திரும்பி வந்துவிட்டான் என்று தம் மனம் தூண்ட; மன்னனை - தசரதனை; ஊர்கொண்ட திங்கள் என்ன - பரிவேடத்தாற் சூழப்பெற்றசந்திரன் போல; சுற்றி -; கார் கொண்ட மேனியானைக் கண்டிலர் - மேகம் போன்றமேனியுடைய இராமனைக் காணாதவராய்; கண்ணில்-; வற்றா நீர் கொண்ட - வறளாத பெருக்கெடுக்கும் நீரைக் கொண்ட; நெடும் தேர்ப்பாகன் நிலை கண்டு - நெடிய தேரைச்செலுத்தும் சுமந்திரனது நிலைமையைப் பார்த்து; நிலையின் தீர்ந்தார் - தமது நிலைகெட்டழிந்தார்கள். ஊர் - ஊர்கோள். சந்திரனைச் சுற்றிய ஒளி வட்டம். பரிவேடம் எனவும் பெறும். உழையர்- அமைச்சர் - “அறிகொன் றறியான் எனினும், உறுதி, உழை இருந்தான் கூறுல் கடன்’ (குறள்.638)என்பதனுள் அமைச்சனை ‘உழை இருந்தான்’ எனல் காண்க. 56 |