1905.‘வடித் தாழ் கூந்தற் கேகயன்
     மாதே! மதியாலே
பிடித்தாய் வையம்; பெற்றனை
     பேரா வரம்; இன்னே
முடித்தாய் அன்றே மந்திரம்?’
     என்றாள் - முகில்வாய் மின்
துடித்தாலென்ன, மன்னவன்
     மார்பில் துவள்கின்றாள்.

     முகில் வாய் - மேகத்திடத்து;  மின் துடித்தால் என்ன - மின்னல்
துடித்தது போல; மன்னவன் மார்பில்- தசரதன் மார்பில்; துவள்கின்றாள்-
துயரதத்தால் துவளும் கோசலை; ‘வடித்தாழ் கூந்தல் கேகயன் மாதே! -
கை செய்துஅழகுற்றுத் தொங்கி நீண்ட கூந்தலையுடைய கைகேயியே! -
மதியாலே - உன்புத்திவல்லமையால்; வையம் பிடித்தாய்- அரசாட்சியைப்
பிடித்துக் கொண்டாய்;  பேராவரம் பெற்றனை - மாறுபட முடியாத
வரத்தைப் பெற்றாய்;  இன்னே - இப்போதே;  மந்திரம் முடித்தாய்
அன்றே’ -
உன் ஆலோசனையை நிறைவேற்றிக் கொண்டாய் அல்லவா;
என்றாள்-

     வடித்தல் - வாரிச் சீவி ஒழுங்குறுத்தல்.  நினைத்த காரியத்தை
அவ்வண்ணமே. அப்பொழுதேநிறைவேற்றிக்கொண்ட கைகேயியின் புத்தி
வன்மையைக் கூறி அவலிக்கிறாள் கோசலை.  முகில்வாய் மின் - தசரதன்
மார்பில் விழுந்து புரளும் கோசலை. தசரதனை இங்கே முகில் என்றபடியால்
அவனும் இராமன் போன்று  கார் மேனியன் ஆதல் வேண்டும் என
அறியலாம்.                                                   66