தேர்ச்சுவடு நகரம் நோக்கிச் செல்வது கண்டு மக்கள் மகிழ்தல் 1920. | தேரின் சுவடு நோக்குவார்; திரு மா நகரின் மிசைத் திரிய ஊரும் திகிரிக் குறி ஒற்றி உணர்ந்தார்; எல்லாம் உயிர் வந்தார்; ‘ஆரும் அஞ்சல்; ஐயன் போய் அயோத்தி அடைந்தான்’ என, அசனிக் காரும், கடலும், ஒருவழிக் கொண்டு ஆர்த்த என்னக் கடிது ஆர்த்தார். |
எல்லாம் - எல்லாரும்; தேரின் சுவடு நோக்குவார் - தேரின் சக்கரத்தழும்பைப் பூமியில் பார்த்து; திருமாநகரின் மிசைத் திரிய ஊரும் திகிரிக் குறி ஒற்றி உணர்ந்தார் - அழகிய பெரிய அயோத்தி நகரின் மேல் திரும்பச் சுழன்று செல்லும் சக்கரஅடையாளத்தைப் பொருத்திச் சார்ந்து அறிந்து; உயிர் வந்தார் - உயிர் வரப்பெற்று; ‘ஆரும் அஞ்சல்- யாரும் பயப்படாதீர்கள்; ஐயன் அயோத்தி போய்அடைந்தான்’ - இராமன் அயோத்திக்குப் போய்ச் சேர்ந்துவிட்டான்;’ என -என்று; அசனிக் காரும் - இடி உடைய மேகமும்; கடலும் -; ஒரு வழிக் கொண்டு - ஓரிடத்தில் சேர்ந்து; ஆர்த்த என்ன - ஒலி்த்தன என்னும்படி; கடிது - விரைவாக; ஆர்த்தார் - மகிழ்ச்சியால் ஆரவாரம் செய்தார்கள். ஆர்ப்புக்கு மேகமும் கடலும் சேர்ந்த ஒலி உவமை. சுமந்திரன்சென்ற தேர்ச் சுவட்டை இராமன் திரும்பச் சென்றதாகக் கருதி மயங்கினர். 81 |