1930. | தொளை கட்டிய கிளை முட்டிய சுருதிச் சுவை அமுதின், கிளை கட்டிய கருவிக் கிளர் இசையின், பசை நறவின், விளை கட்டியின், மதுரித்து எழு கிளவிக் கிளி விழிபோல், களை கட்டவர் தளை விட்டு எறி குவளைத் தொகை கண்டான். |
தொளை கட்டிய கிளை- தொளை பொருந்திய புல்லாங்குழலிலிருந்து; முட்டிய -தாக்கி எழுப்பிய; சுருதி - காதால் கேட்டு அனுபவிக்கும் தன்மையதான; சுவை அமுதின்- சுவையுடைய இசை அமுதம் போலவும்; கிளை கட்டிய கருவி - நரம்புகள் இணைத்துக்கட்டப்பெற்ற யாழிலிருந்து; கிளர் இசையின் - உண்டாகின்ற இசையைப் போலவும்; பசை நறவின் - சாரமுள்ள தேனைப் போலவும்; விளை கட்டியின் - நன்றாக விளைந்த பாகுக் கட்டி போலவும்; மதுரித்து எழு - இனிமை உடையதாகி எழுகின்ற; கிளவி -பேச்சினை உடைய; கிளி - கிளி போல்பவளாகிய சீதையினது; விழி போல் -கண்களைப் போல; களை கட்டவர் - களை பறிப்பவர்; தளைவிட்டு எறி -வயலிலிருந்து வீசி எறிகின்ற; குவளைத் தொகை கண்டான் - குவளை மலர்களின்கூட்டத்தைப் பார்த்தான். சீதையின் சொல்லினிமைக்குக் குழலிசை, யாழிசை, தேன், கட்டி என இவை உவமையாம்.களை பிடுங்குவார் எறிந்த கருங்குவளை மலர்கள் சீதையின் கண்போலத் தோன்றிய இராமனுக்குஎன்பதாகும். 5 |