1939. | பொழியும் கண்ணின் புதுப் புனல் ஆட்டினர்; மொழியும் இன் சொலின் மொய்ம் மலர் சூட்டினர்; அழிவு இல் அன்பு எனும் ஆர் அமிர்து ஊட்டினர்; வழியில் வந்த வருத்தத்தை வீட்டினர். |
கண்ணின் பொழியும் புதுப்புனல் ஆட்டினர் - முனிவர் கண்களில் பொழிகின்ற கண்ணீராகிய புதிய நீரால் ஆட்டி; மொழியும் இன்சொலின் மொய்ம்மலர் சூட்டினர் -பேசுகின்ற இன்சொல்லாகிய நெருங்கிய மலர்களைச் சூட்டி; அழிவு இல் - கெடுதல்இல்லாத; அன்பு எனும் ஆர் அமிர்து ஊட்டினர் - அன்பு எனும் அரிய அமுதத்தைக் உண்ணக் கொடுத்து; (அம் முனிவர்), வழியில் வந்த வருத்தத்தை - (அம் மூவரும்) வழிநடையால் உடையராய வருத்தத்தை; வீட்டினர் - இல்லாதபடி போக்கினர். முனிவர்கள் இராமன் முதலிய மூவர்க்கும் உண்டாகிய வழிநடை வருத்தம் போக்கியவாறு.கண்ணில் வழியும் நீரால் அவர்களைக் குளிப்பாட்டி, இன் சொற்களாகிய மலர்களைச் சூட்டி,அன்பாகிய அமுதூட்டிப் போக்கினர். மூன்றும் முறையே செயல், சொல், மனம் மூன்றாலும் அவர்கள்இராமன்பால் கொண்ட அன்பின் வெளிப்பாடாயின. “புனையும் கண்ணி எனதுடைய வாசகம் சொல்மாலையே” என்ற ஆழ்வார் பாசுரம் ‘இன்சொலின் மொய்ம்மலர்’ என்பதனோடு ஒத்தது. “பொழிந்த உண்கண் நீர்ப் புதுப் புனல் சூட்டினார்” என்ற நகர்நீங்கு படல அடிகளை (1820.) இங்குமுதலடியோடு ஒப்பு நோக்குக. 14 |