நாட் கடன் செய்து அமுதுண்ண முனிவர் இராமனை வேண்டுதல் 1940. | காயும், கானில் கிழங்கும், கனிகளும், தூய தேடிக் கொணர்ந்தனர்; ‘தோன்றல்! நீ ஆய கங்கை அரும் புனல் ஆடினை, தீயை ஓம்பினை, செய் அமுது’ என்றனர். |
(அம் முனிவர்கள்), கானில் - காட்டிலிருந்து; காயும் கிழங்கும் கனிகளும் தூயதேடிக் கொணர்ந்தனர் - காய், கிழங்கு, பழம் ஆகியவற்றைத் தூயவையாய்த் தேடிக் கொண்டுவந்தவர்களாய்; (இராமனை நோக்கி) ‘தோன்றல்! - யாவரினும் சிறந்து விளங்குபவனே!; நீ-; ஆய கங்கை அரும் புனல் ஆடினை - அப்படிப்பட்டகங்கையின் அரிய நீரில் முழுகியவனாய்; தீயை ஒம்பினை - எரியை வளர்த்து (வழிபாடு)முடித்து; அமுது செய் - உண்பாயாக;’ என்றனர் - என்று சொன்னார்கள். தோன்றல் - பிறர் அறியுமாறு புகழுடன் விளங்கலாம். ஆய கங்கை - தூயதாகிய கங்கைஎன்றவாறு. நீராடி, எரியோம்பி, அமுது செய்தல் நித்திய கரும நெறியாம். 15 |