இராமன் சீதையோடு கங்கையில் நீராடுதல் 1941. | மங்கையர்க்கு விளக்கு அன்ன மானையும், செங் கை பற்றினன், தேவரும் துன்பு அற, பங்கயத்து அயன், பண்டு, தன் பாதத்தின், அம் கையின் தரும் கங்கையின் ஆடினான். |
மங்கையர்க்கு விளக்கு அன்ன மானையும் - (இராமன்) பெண்களுக்குத் தீபம்போன்றவளாகிய சீதையையும்; தேவரும் துன்பு அற- தேவர்களும் துன்பம் நீங்கும்படியாக;செங்கை பற்றினன் - தன் சிவந்த கைகளாற் பிடித்துக் கொண்டு; பங்கயத்து அயன் -தாமரை மலரில் வீற்றிருக்கும் பிரம தேவன்; பண்டு - முன்னொருகால்; தன்பாதத்தின் - திருமாலாகிய தன் திருவடிகளில்; அம் கையின் - பிரமனாகிய தன்கையில் உண்டாகிய கமண்டல நீரால்; தரும் - உண்டாக்கிய; கங்கையின் -கங்கை யாற்றில்; ஆடினான் - முழுகினான். திருமால் திருவிக்கிரமனாக அவதாரம் எடுத்த பொழுது அப் பெருமானது திருவடி சத்தியலோகம் செல்ல, அங்கிருந்த அவர்தம் மகனாகிய பிரம தேவன் தன் தந்தையாரது திருவடி யென்றுகருதித் தன் கையில் உள்ள கமண்டல நீரால் பாதங்களை விளக்கி வழிபாடு செய்ய, அத்திருவடிநீரே கங்கையாறாகப் பெருகியது என்பது விஷ்ணு புராணம். தன்னிடத்துண்டாகிய கங்கையில் தானேமூழ்கினான் என்பதாம். 16 |