1947.நுரைக் கொழுந்து எழுந்து ஒங்கி நுடங்கலால்
நரைத்த கூந்தலின் நங்கை மந்தாகினி,
உரைத்த சீதை தனிமையை உன்னுவாள்,
திரைக்கை நீட்டி, செவிலியின் ஆட்டினாள்.

     நுரைக் கொழுந்து எழுந்து ஒங்கி நுடங்கலால் - நுரைகளாகிய
வெண்மையானகொழுந்துகள் நீரின்மேல் ஓங்கி எழுந்து வளைந்து
சூழ்வதால்;  நரைத்த கூந்தலின் -நரை பாய்ந்த கூந்தலை உடையாள்
போல உள்ள;  நங்கை மந்தாகினி - பெண்ணாகிய கங்கை;உரைத்த -
பாராட்டப் பெறுகின்ற;  சீதை - சீதையினது;  தனிமையை -பெண்டிர்
துணை இல்லாத தனிமையை; உன்னுவாள் - கருதுபவளாய்; செவிலியின் -
செவிலித் தாய் போல;  திரைக் கை நீட்டி - அலைகளாகிய கைகளை
நீட்டி;  ஆட்டினாள் - நீராட்டினாள்.

     கங்கை செவிலித்தாயாக இருந்து சீதையை நீராட்டுவதாகக் கற்பனை
செய்தார்.செவிலித்தாய் என்பதற்கு ஏற்பக் கங்கைக்கு நரைத்த கூந்தலாக
நுரைக்கொழுத்தைக் கூறினார்.“நரை விராவுற்ற நறுமென் கூந்தல் செம்முது
செவிலியர்” (அகநா.254) என்பதும்காண்க.                         22