1960. | ஊற்றமே மிக ஊனொடு மீன் நுகர் நாற்றம் மேய நகை இல் முகத்தினான், சீற்றம் இன்றியும் தீ எழ நோக்குவான், கூற்றம் அஞ்சக் குமுறும் குரலினான்.1 |
ஊற்றமே மிக - வலிமை மிகும்படி; ஊனொடு மீன் நுகர் - விலங்குகளின்இறைச்சியோடு மீனையும் தின்று; நாற்றம் மேய - புலால் நாற்றம் பொருந்திய; நகை இல் முகத்தினான் - சிரிப்பு என்பது சிறிதும் இல்லாத (கடு கடுப்பான) முகத்தினைஉடையவன்; சீற்றம் இன்றியும் - கோபம் இல்லாத போதும்; தீ எழ நோக்குவான் -கனல் கக்குமாறு பார்ப்பவன்; கூற்றம் அஞ்சக் குமுறும் குரலினான் - இயமனும் பயப்படும்படிஅதிர்ந்து ஒலிக்கின்ற குரலை உடையவன். புலால் நாறும் வாய், சிரிப்பற்ற முகம், கனல் பார்வை, இடிக்குரல் என்று வேட்டுவச்சாதி இயல்புக் கேற்பக் குகன் தன்மைகளைக் கூறினார். கூற்றம் - உம்மைதொக்கது. 8 |