1971. | அடி தொழுது உவகை தூண்ட அழைத்தனன், ஆழி அன்ன துடியுடைச் சேனை வெள்ளம், பள்ளியைச் சுற்ற ஏவி, வடி சிலை பிடித்து, வாளும் வீக்கி, வாய் அம்பு பற்றி இடியுடை மேகம் என்ன இரைத்து அவண் காத்து நின்றான். |
அடி தொழுது - (இராமன் இன்று எம்மொடு தங்குக என்று சொல்லக் கேட்ட குகன்)இராமன் திருவடிகளை வணங்கி; உவகை தூண்ட - மகிழ்ச்சி மேல் மேல் மிக; ஆழிஅன்ன துடியுடைச் சேனை வெள்ளம் அழைத்தனன் - கடலை ஒத்த துடிப்பறையோடு கூடிய தனது சேனைப் பெருக்கை அழைத்து; பள்ளியைச் சுற்ற ஏவி - (விலங்கு முதலியவற்றால் துன்பம்நேராவாறு) அவர்கள் தங்கியுள்ள தவச்சாலையைச் சுற்றிப் பாதுகாக்கக் கட்டளையிட்டு; வரிசிலை பிடித்து - (தானும்) கட்டமைந்த வில்லைப் பிடித்து; வாளும் வீக்கி -(முன்பு கழித்த) வாளையும் அரைக்கச்சிலே கட்டி; வாய் அம்பு பற்றி - கூரிய அம்மைப்பிடித்து; இடியுடை மேகம் என்ன இரைத்து - இடியோடு கூடிய மழை மேகம் போல உரத்த சத்தம்இட்டு; அவண் - அத்தவச்சாலையில்; காத்து நின்றான் - அம்மூவரையும் காவல்செய்து நின்றான். இராமன் அனுமதி தந்த மகிழ்ச்சியால் அவனைக் காக்கும் பொறுப்பை மிகச் சிறப்பாகச்செய்கிறான் குகன். 19 |