1986. | ‘விடு, நனி கடிது’ என்றான்; மெய் உயிர் அனையானும், முடுகினன், நெடு நாவாய்; முரி திரை நெடு நீர்வாய்; கடிதினின், மட அன்னக் கதிஅது செல, நின்றார் இடர் உற, மறையோரும் எதி உறு மெழுகு ஆனார். |
(இராமனும்) ‘நனி கடிது விடு’ என்றான் - மிக வேகமாக நாவாய்களைச் செலுத்து என்றுகூற; மெய் உயிர் அனையானும் - உடம்பும் உயிரும் ஒத்த நண்பினை இராமன்பால் உடையகுகனும்; முரிதிரை நெடு நீர்வாய் - ஒடிகின்ற அலைகளையுடைய நீண்ட கங்கை நீரிடத்தே; நெடு நாவாய் - பெரிய ஓடத்தை; முடுகினன் - விரைந்து செலுத்த; அதுகடிதினின் மட அன்னக் கதிசெல - அந்நாவாய் விரைவாக இளைய அன்னப்பறவை நீரிற்செல்லுமாறு போலச் செல்ல; நின்றார் மறையோரும் - கரையின்கண் நின்றவர்களாகியவேதியரும்; இடர் உற - துன்பமடைந்து; எரி உறு மெழுகு ஆனார் - நெருப்பில் பட்ட மெழுகைப் போல மனம் உருகி இரங்கினார்கள். நட்புக்கு உடம்பும் உயிரும் சேர்ந்த சேர்க்கையைச் சொல்வது வழக்கு. ஆதலின், ‘மெய்உயிர் அனையானும்’ என்று குகன் - இராமனுக்குள்ள நட்பைச் சொன்னார். ‘உடம்பொடு உயிரிடைஎன்ன மற்றன்ன, மடந்தையொடு எம்மிடை நட்பு’ என்ற குறளையும் (குறள் 1122) காண்க. நாவாய்களின் செல்கை அன்னச்செலவு போலும் என்றார்; பின்னும் அன்னப் பேடை சிறை இலதாய்க்கரை, துன்னிற்றென்னவும் வந்தது தோணியே’ என்றது (2372.)காண்க. 34 |