1997. | ‘அங்கு உள கிளை காவற்கு அமைதியின் உளன். உம்பி; இங்கு உள கிளை காவற்கு யார் உளர்? உரை செய்யாய்; உன் கிளை எனது அன்றோ? உறு துயர் உறல் ஆமோ? என் கிளை இது கா, என் ஏவலின் இனிது’ என்றான். |
‘உம்பி - உன் தம்பியாகிய பரதன்; அங்கு உள கிளை காவற்கு அமைதியின் உளன்- அயோத்தியில் உள்ள குடிமக்களையும் சுற்றத்தையும் காப்பாற்ற வேண்டி அதற்குரியஆட்சிக் குணங்களோடு இருக்கின்றான்; (நீ என்னுடன் வந்துவிட்டால்) இங்கு உள கிளை காவற்குயார் உளர்? உரை செய்யாய் - சிருங்கிபேரத்தில் உள்ள சுற்றத்தையும் குடிகளையும் காப்பாற்ற யார் இருக்கின்றார்கள், சொல்வாயாக; (நீயும் நானும் ஒன்றான பிறகு) உன்கிளை எனது அன்றோ - உன்னுடைய சுற்றம் என் சுற்றம் அல்லவா?; உறு துயர் உறர் ஆமோ?- மிக்க துன்பத்தை என் பிரிவால் எய்தலாமோ; என் கிளை இது என் ஏவலின் இனிது கா’- என்னுடைய சுற்றமாகிய இவ்வேடுவர்களை என் கட்டளையால் இனிது காப்பாயாக;’ என்றான் -. உன் ஏவலின் நான் இருக்கின்றேன் என்று கூறிய இராமன் அதனையும் மனம் கொள்ளாது குகன்படும் அவதி கண்டு, ‘நானே தலைவன் நீ என் ஏவல் வழி என் சுற்றமாகிய இவ்வேடுவர்களைக் காப்பாற்றி ஆட்சி செய்து இங்கே தங்குவாயாக’ என்றான்; அவன் மறுக்கமாட்டாமைக்கு எடுத்துக்காட்டாகப் பரதனைக் கூறினான். 45 |