2003. | ‘சேந்து ஒளி விரி செவ் வாய்ப் பைங் கிளி, செறி கோலக் காந்தளின் மலர் ஏறிக் கோதுவ, - கவின் ஆரும் மாந் தளிர் நறு மேனி மங்கை! - நின் மணி முன்கை ஏந்தின எனல் ஆகும் இயல்பின; இவை காணாய்! |
கவின் ஆரும்- அழகு பொருந்திய; மாந்தளிர் நறுமேனி மங்கை- மாந்தளிர் போன்ற மணமும் நிறமும் கூடிய மேனியை உடைய சீதையே!; சேந்து ஒளி விரி - சிவந்து ஒளி விரிக்கின்ற; செவ்வாய் - சிவந்த வாயினை உடைய; பைங்கிளி -பசிய கிளி; கோலம் செறி - அழகு பொருந்திய; காந்தளின் மலர் ஏறிக் கோதுவ -காந்தள் மலரின்மேல் ஏறி அம் மலரைக் கோதுகின்றவை; நின் மணி முன்கை ஏந்தின எனல் ஆகும் இயல்பின - நின்னுடைய அழகிய முன்கையில் ஏந்திக் கொண்டிருக்கின்றதாகச்சொல்லப்பெறும் இயல்பினை உடைய; இவை - இக் காட்சிகளை; காணாய் -. காந்தள் மலர் மகளிர் கைபோலும் ஆதலின் அம்மலர்மேல் ஏறி அம் மலரைக் கோதுகின்றகிளி, பிராட்டியின் முன் கைமேல் ஏறி அமர்ந்துள்ளது போல் காட்சி அளிப்பதாயிற்று. 5 |