2011.‘கூடிய நறை வாயில்
     கொண்டன, விழி கொள்ளா
மூடிய களி மன்ன,
     முடுகின நெறி காணா,
ஆடிய, சிறை மா வண்டு,
     அந்தரின், இசை முன்னம்
பாடிய பெடை கண்ணா
     வருவன பல - காணாய்!

     சிறை மா வண்டு- சிறகுகளை உடைய கரிய (ஆண்) வண்டு; கூடிய
நறை வாயில்கொண்ட -
மிக்க தேனை வாயிற் கொண்டன வாய்; விழி
கொள்ளா -
(அம்மயக்கத்தால்) விழி திறந்து  பார்க்க மாட்டாதவையாய்;
மூடிய களி மன்ன -கண்ணை மூடிக்கொள்ளுமாறு போதை பொருந்த;
முடுகின நெறி காணா - விரைந்து  (பறந்து)செல்லுதற்குரிய வழியைக்
காணமாட்டாதனவாய்;  அந்தரின் - குருடரைப்போல; முன்னம்இசை
பாடிய பெடை கண்ணா வருவன பல-
முன்னால் இசைபாடிச் செல்கின்ற
பெண் வண்டைக்கண்ணாகக் கொண்டு வருவன பலவற்றை;  காணாய்-.

     குருடர் ஒலியின் மூலம் வழி அறிந்து சேறல் போல, முன்னால் பெண்
வண்டுகள் பாடும் ஒலிகேட்டுத் தேன் குடித்து மயங்கிக் கண்திறவா ஆண்
வண்டுகள் வழி அறிந்து  சென்றன வாதலின்‘பெடை கண்ணா’ என்றார்.  13