இராமன் அங்குத் தங்க இயலாமை கூறுதல்  

2030.பூண்ட மா தவன், அம் மொழி
     விரும்பினன் புகல,
‘நீண்டது அன்று இது நிறை புனல்
     நாட்டுக்கு’ நெடு நாள்,
மாண்ட சிந்தைய! இவ் வழி
     வைகுவென் என்றால்,
ஈண்ட யாவரும் நெருங்குவர்‘
     என்றனன் இராமன்.

     பூண்ட மாதவன் - மேற்கொண்ட தவத்தை  உடைய பரத்து வாசன்;
அம்மொழி -மேற் சொல்லிய வார்த்தைகளை;  விரும்பினன் புகல -
அன்பொடு கூற; இராமன்-; நெடுநாள் மாண்ட சிந்தைய! - நீண்ட
நாளாகத் தவத்தின் மேற்சென்ற’ பெருமை பெற்றமனத்தினை உடைய
முனிவ!; இது - இந்த இடம்; நிறை புனல் நாட்டுக்கு -நிறைந்த நீர்வளம்
உடைய எனது கோசல நாட்டுக்கு; நீண்டது அன்று - நெடுந்தொலைவில்
உள்ளது அன்று; இவ் வழி - இவ் விடத்தில்;  வைகுவென் என்றால் -
தங்கியிருப்பேனாயின்; யாவரும் - கோசல நாட்டு மக்கள் யாவரும்;
ஈண்ட - விரைவாக; நெருங்குவர் - என்னை வந்து அடைந்துவிடுவார்கள்;’
என்றனன் -.

     நாட்டுக்கு மிக அருகில் தங்கினால் நாட்டு மக்கள் அடிக்கடி வருவர்;
ஆதலின் அது தன்தவத்திற்கும் இடையூறாகும்; முனிவர்களின்
கடமைகளுக்கும் இடையூறாகும் என்று புலப்படுத்திமறுத்தான் இராமன்.  32