முனிவன் கூறிய அறிவுரை 2031. | ‘ஆவது உள்ளதே; ஐய! கேள்; ஐ - இரண்டு அமைந்த காவதப் பொழிற்கு அப் புறம் கழிந்தபின், காண்டி; மேவு காதலின் வைகுதிர் - விண்ணினும் இனிதால்; தேவர் கைதொழும் சித்திர கூடம் என்று உளதே.’ |
‘ஐய! - இராமனே!; கேள் - கேட்பாயாக; ஆவது உள்ளதே - நீ சொல்லியது உண்மையே ஆகும்; ஐ இரண்டு அமைந்த காவதப் பொழிற்கு? - பத்துக் காததூரம் உள்ள இச் சோலைக்கு; அப்புறம் கழிந்தபின் - அப்பால் சென்ற பிறகு; தேவர் கைதொழும் சித்திர கூடம் என்று உளது - தேவர்களும் வணங்கக்கூடிய சித்திர கூடம்என்று பெயர் பெற்ற மலை உள்ளது; விண்ணினும் இனிது - தேவர் உலகத்தினும் இனிமையானது; மேவு காதலின் வைகுதிர் - பொருந்திய அன்போடு அவ்விடத்தில் தங்கியிருப்பீர்.’ இராமன் கூறியது உண்மையே என்பதை ‘ஆவது உள்ளதே’ என்று கூறி முனிவன் ஏற்றுக் கொண்டான்.அதனால், மேலும் வற்புறுத்தவில்லை. ‘ஏ’ இரண்டும் தேற்றம். 33 |