2035.ஆலை பாய் வயல் அயோத்தியர்
     ஆண்தகைக்கு இளையான்
மாலை மால் வரைத் தோள்
     எனும் மந்தரம் திரிய,
காலை வேலையைக் கடந்தது,
     கழிந்த நீர் கடிதின்;
மேலை வேலையில் பாய்ந்தது,
     மீண்ட நீர் வெள்ளம்.

     ஆலை பாய் வயல் - கரும்பாலையிலிருந்து கருப்பஞ்சாறு பாய்கின்ற
வயல்களை உடைய;அயோத்தியர் ஆண்தகைக்கு இளையான் -
அயோத்திநகரத்தில் உள்ளார்க்கு ஆண்களிற்சிறந்தவனாகிய இராமனுக்குத்
தம்பியாய இலக்குவன்;  மாலை மால்வரைத் தோள் எனும் மந்தரம்
திரிய
- மாலை அணிந்த பெரிய மலை போன்ற தோளாகிய
மந்தரமலையானது மாறி மாறிநீரைத்தள்ள;  கழிந்த நீர் - கையால்
தள்ளப்பட்ட நீரானது;  காலை வேலையைக்கடிதின் கடந்தது - சூரியன்
உதிக்கும் காலைக் கடலாகிய கீழ்க்கடலை விரைவாகக் கடந்து அப்பால்
சென்றது; மீண்ட நீர் வெள்ளம் - தெப்பத்தால் மீண்டுசென்ற
நீர்ப்பெருக்கு;கடிதின் மேலை வேலையின் பாய்ந்தது - விரைவாக
மேற்குத் திசையில் உள்ள கடலிற்பாய்ந்து  சென்றது.

     கையால் தள்ளிய நீர் கீழ்க்கடலைக் கடக்க,  தெப்பத்தால் விடுபட்ட
நீர் மேற் கடலைஅடைந்தது என்றவாறாம். ‘கடிதின்’ என்பதனை
இரண்டுக்கும் கூட்டுக.                                         37