2059. | ‘ஒருவு இல் பெண்மை என்று உரைக்கின்ற உடலினுக்கு உயிரே! மருவு காதலின் இனிது உடன் ஆடிய மந்தி அருவி நீர்கொடு வீச, தான் அப் புறத்து ஏறி, கருவி மா மழை உதிர்ப்பது ஓர் கடுவனைக் - காணாய்! |
ஒருவு இல் பெண்மை என்று உரைக்கின்ற உடலினுக்கு உயிரே- நீங்காத பெண்மை என்று சொல்லப்படும் ஓர் உடலுக்கு உயிர் போலச் சிறந்தவளே! மருவு காதலின் - மிகுந்தஅன்புடன்; இனிது - இன்பமாக; உடன் ஆடிய மந்தி- ஆண் குரங்காகிய தன்னோடுநீராடிய பெண்குரங்கு; அருவி நீர் கொடு வீச - அருவி நீரைக் கொண்டு (தன்மேல்) தூவ; தான்- (ஆண் குரங்கு); அப்புறத்து ஏறி - மலையின் மற்றொரு பக்கத்தில் மேல் ஏறி; கருவி மாமழை - தொகுதி கொண்ட பெரிய மேகத்தை; உதிர்ப்பது -நீரைச் சிந்தச் செய்வதாகிய; ஓர் கடுவனை - ஓர் ஆண்குரங்கை; காணாய் -. நீராடுகிற போது மந்தி அருவி நீரைத் தூவ, கடுவன் மலைமேல் ஏறி மேக நீரை அம்மந்திமேல் வீசி ஆண்மை காட்டியதென்க. கருவி - தொகுதி எனப் பொருள்படும் உரிச்சொல் ‘கருவிதொகுதி’ (தொல். சொல். உரி. 56.) இங்குத் தொகுதியாவது இடி மின்னல் முதலியவற்றின்கூட்டம், பெய்யும் மேகம் என்றவாறாம். கடுவன் - ஆண் குரங்கு. மந்தி - பெண் குரங்கு.இக்காலத்துப் பேர் உருவுடைய ஆண் குரங்கை ‘மந்தி’ - என வழங்கல் உலகவழக்கு, 14 |