2061. | ‘சீலம் இன்னது என்று அருந்ததிக்கு அருளிய திருவே! நீல வண்டினம் படிந்து எழ, வளைந்து உடன் நிமிர்வ கோல வேங்கையின் கொம்பர்கள். பொன் மலர் தூவிக் காலினில் தொழுது எழுவன நிகர்ப்பன - காணாய்! |
சீலம் இன்னது என்று அருந்ததிக்கு அருளிய திருவே! - (கற்புடைய மடந்தையரின்)நல்லொழுக்கம் இவ்வாறானது என்று அருந்ததிக்குக் காட்டிய திருமகளே!; கோல வேங்கையின்கொம்பர்கள்- அழகிய வேங்கை மரத்தின் பூங்கிளைகள்; நீல வண்டினம் படிந்து எழ- நீல நிறமான வண்டுக் கூட்டங்கள் தம்மேல் உட்கார்ந்து எழுதலினால்; வளைந்து உடன்நிமிர்வ - கீழே வளைந்து பிறகு மேலே நிமிர்வன; பொன்மலர் தூவி - பொன்னிறமலர்களைத் தூவி; காலினில் - பாதங்களில்; தொழுது எழுவன - வணங்கிஎழுகின்றவற்றை; நிகர்ப்பன- ஒத்திருக்கும் அவற்றை; காணாய்-. பிராட்டியின் திருவடிகளில் பொன்னிறமான வேங்கை மலர்களைத் தூவி வழிபட்டு எழுவனஎன்றதனால் இது தற்குறிப்பேற்றவணியாம். 16 |