2071.‘செம் பொனால் செய்து, குலிகம் இட்டு
     எழுதிய செப்பு ஓர்
கொம்பு தாங்கியது எனப் பொலி
     வன முலைக் கொடியே!
அம் பொன் மால் வரை, அலர் கதிர்
     உச்சி சென்று அணுகப்
பைம் பொன் மா முடி மிலைச்சியது
     ஒப்பது - பாராய்!

     செம்பொனால் செய்து - சிவந்த பொன்னால் செய்து; குலிகம்
இட்டு எழுதிய -
சாதிலிங்கக் குழம்பினால் தொய்யிலாகப் படம் வரைந்து
எழுதிய;  செப்பு - சிமிழை; ஓர்கொம்பு தாங்கியது - ஒரு கொம்பு
தாங்குகின்றது;  எனப் பொலி - என்றுசொல்லுமாறுவிளங்குகின்ற;
வனமுலைக் கொடியே - அழகிய முலைகளை உடைய
கொடி
போல்பவளே!; அலர்கதிர் - ஒளி விளங்குகின்ற சூரியன்; அம்
பொன்மால்வரை உச்சி சென்று அணுக -
அழகிய பொன் மயமான
பெரிய மலையின் உச்சியில் சென்றுசேர; பைம்பொன் மாமுடி
மிலைச்சியது ஒப்பது
- அம்மலைக்குப் பசிய பொன்னால் பெரியமகுடம்
சூட்டியது  போல் உள்ளதனை;  பாராய் -.

     சூரியன் உச்சிப் போதில் மலை உச்சியை வந்து அடைகிறபோது
மலைக்குப் பொன் மகுடம்சூட்டியதுபோல் தோற்றம் அளிக்கிறது. செப்பின்
மேல் வண்ணக்கோலம் எழுதுதல் உண்டாதலின் அதுதொய்யில் எழுதிய
முலைக்கு ஒப்பாயிற்று.  வனம் - அழகு.                           26