2018. ‘அசும்பு பாய் வரை அருந் தவம்
     முடித்தவர், துணைக் கண்
தசும்பு வேய்ந்தவர் ஒத்தவர்
     தமக்கு, விண் தருவான்
விசும்பு தூர்ப்பன ஆம் என,
     வெயில் உக விளங்கும்
பசும் பொன் மானங்கள் போவன
     வருவன - பாராய்!’

     அசும்புபாய் வரை - ஊற்றெடுத்து  நீர்பாயும்  மலையிலே; அரும்
தவம்முடித்தவர் -
செய்தற்கு  அரிய தவத்தைச் செய்து  முடித்தவர்கள்
ஆகிய; துணைக்கண்தசும்பு வேயந்தவர் ஒத்தவர் தமக்கு -தம்
இரண்டு கண்களிலும் நீர்க்குடம் கவிழ்த்தாற்போல அன்பினால் நீர் பெருக
விடுகின்றவர்களை ஒத்தவர்களாய நல்லோர்களுக்கு; விண்தருவான்- வீடு
பேறாகிய விண்ணுலக வாழ்வினைத் தர வேண்டி; விசும்பு தூர்ப்பனஆம்
என -
ஆகாயத்தை மூடிக் கொள்வனவாகும் என்று சொல்லும்படி; வெயில்
உக விளங்கும்-
ஒளி சிந்தும்படி விளங்குகின்ற; பசும்பொன்மானங்கள்-
பசிய பொன்னால் ஆகிய
விமானங்கள்;போவன வருவன -
போகின்றவற்றையும், மீள வருகின்றவற்றையும்; பாராய்-.

     சித்திரகூட மலை தேவர்கள் சஞ்சரிக்கும் இடம், ஆதலின், அவர்கள்
விமானத்தில் ஏறிப்போவதும் வருவதுமாயிருத்தலின் வானமெங்கும்
விமானத்தால் போர்த்தப்பட்டது போல் உள்ளது.அதுவே அருந்தவம்
முடித்தவர்களுக்கு  வீடுபேறு தருதற்கு விண்ணுலகு கொண்டு செல்ல வந்த
விமானங்கள்போலவும் தோற்றம் அளித்தன. தசும்பு - குடம்; புறம்
பொசிகின்ற மண்குடத்தைக்குறிக்கும்.                             36