இலக்குவன் அமைந்த குடிலில் இராமன் சீதையோடு குடிபுகுதல்  

2088.மாலை வந்து அகன்றபின், மருங்கு இலாளொடும்,
வேலை வந்து உறைவிடம் மேயது ஆம் என,
கோலை வந்து உமிழ் சிலைத் தம்பி கோலிய
சாலை வந்து எய்தினான், தவத்தின் எய்தினான்.

     தவத்தின் எய்தினான் - தவம் காரணமாகக் காடு நோக்கி வந்த
இராமன்; மாலைவந்து அகன்றபின் - மாலைப் பொழுது வந்து சென்ற
பிறகு (இரவில்);  வேலை உறைவிடம்வந்து மேயது ஆம் என -
கடலானது  தான் தங்கும் இடத்தை வந்து சேர்ந்தது என்று
சொல்லும்படியாக; மருங்கிலாளொடும் - இடையில்லாத சீதையோடும்;
கோலை  வந்து உமிழ் சிலைத் தம்பி - அம்பை உமிழுகின்ற வில்லை
உடைய தம்பியாகிய இலக்குவன்; கோலிய - செய்தமைத்த;  சாலை வந்து
எய்தினான் -
சாலை இருக்கும் இடத்தைவந்தடைந்தான்.

     நீலக்கடல் போன்ற நிறம் உடையவன் இராமன் ஆதலின், கடல் தன்
உறைவிடம் போனதுபோல என்று உவமைப்படுத்தினார்.              43