2115.எறிபகட்டினம், ஆடுகள், ஏற்றை மா,
குறி கொள் கோழி, சிவல், குறும்பூழ், நெடும்
பொறி மயிர்க் கவுதாரிகள், போற்றுறு
நெறியின் மாக்களும் முந்தி நெருங்கினார்.

     எறி-ஒன்றை ஒன்று எறிகின்ற; பகட்டினம்- எருதுகளின்கூட்டம்;
ஆடுகள்-;  ஏற்றை மா- ஆண் விலங்குகள்; குறிகொள்கோழி-
(தம்மை ஏவுவாரது) குறிப்பினைக் கொண்டு பொருதல்
செய்யும்
கோழிகள்; சிவல் -; குறும்பூழ் -; பொறி நெடுமயிர்க்கவுதாரிகள் -
(உடலிற்) புள்ளியுடைய நீண்ட மயிர் உடையதாகிய கவுதாரிப் பறவையும்
(என இவற்றைப்); போற்றுறு- பாதுகாத்து வைத்துப்போரிடச் செய்யும்;
நெறியின் - துறையில் சிறந்த; மாக்களும்-மக்களும் ; முந்தி
நெருங்கினர் -.

     47,48  இப்பாடல்களை இங்கு ஒப்பு நோக்குக. பறவையும், விலங்கும்
ஆகியவற்றைப்போரிடவிட்டுக் காண்டல் அக்கால அரசர்க்குரிய பொழுது
போக்குகளுள் ஒன்றாதலின் அத்துறைவல்லவர் உடன் சென்றனர். ‘நெறி
இல் மாக்கள்’ விலங்கையும் பறவையையும்  தம்முன்மோதவிடுவார்
நன்னெறியில்லாத அறிவற்றவர் ஆதலின் மாக்கள் எனப்பெற்றார் என்பதும்
பொருள்.  ஈண்டு மக்களை ‘மாக்கள்’ என்று கூறியது  செய்யுள் ஓசை
நிறைத்தற் பொருட்டு,                                      14