பொலிவழிந்த நாட்டைக் கண்ட பரதன் துன்புறுதல்  

2129.என்ற நாட்டினை நோக்கி, இடர் உழந்து,
ஒன்றம் உற்றது உணர்ந்திலன், உன்னுவான்,
‘சென்று கேட்பது ஓர் தீங்கு உளது ஆம்’ எனா,
நின்று நின்று, நெடிது உயிர்த்தான்அரோ!

     என்ற - முன் கூறியவாறு  உள்ள; நாட்டினை - கோசல நாட்டை;
நோக்கி - (பரதன்) பார்த்து; இடர் உழந்து - பெருந்துன்பத்தாற் கலங்கி;
உற்றது ஒன்றும் உணர்ந்திலன் - நிகழ்ந்த செய்திகள் ஒன்றும்
உணராதவனாய்;  ‘சென்றுகேட்பது ஓர் தீங்கு’ - நாம் போய்க் கேட்கப்
போகின்ற தீய செய்தி ஒன்று; உளதுஆம்’ எனா - இப்பொழுது
நேர்ந்துள்ளதாகும் என்று; உன்னுவான் - கருதியவனாய்; நின்று நின்று -
தயங்கிச் சோர்ந்து; நெடிது உயிர்த்தான் - பெருமூச்சுவிட்டான்.

     நாட்டைக் கண்ட அளவிலே  தீய செய்தியைக் கேட்கப்போகிறோம்
என்னும் நினைவுஉண்டாயிற்று என்பதாகும்.  துன்ப மிகுதியில் பெரு மூச்சு
எறிதல் வழக்கு. ‘அரோ’ஈற்றசை.                                 28