1421. | ‘உமைக்கு நாதற்கும், ஓங்கு புள் ஊர்திக்கும், இமைப்பு இல் நாட்டம் ஓர் எட்டு உடையானுக்கும், சமைத்த தோல் வலி தாங்கினர் ஆயினும், அமைச்சர் சொல்வழி ஆற்றுதல் ஆற்றலே, |
‘உமைக்கு நாதற்கும் - உமாதேவியின் கணவனாகிய சிவபெருமானுக்கும்; ஓங்கு புள்ஊர்திக்கும் - உயர்ந்த கருடனை வாகனமாக உடைய திருமாலுக்கும்; இமைப்பு இல் நாட்டம்- இமையாத கண்கள்; எட்டு உடையானுக்கும் - எட்டு உடைய நான்முகனுக்கும்; சமைத்த -பொருந்திய; தோள்வலி - தோள் ஆற்றலை; தாங்கினர் - பெற்றுடையராக (அரசர்); ஆயினும் - இருந்தாலும்; அமைச்சர் சொல் வழி - மந்திரியரது ஆலோசனைவழியில்; ஆற்றுதல் - அரசாட்சியைச் செய்தல்; ஆற்றல் - ஆண்மையாகும்.’ மும்மூர்த்திகளைப் போலத் தோள்வலி பெற்ற அரசரும்அமைச்சர் சொற்கேட்டு ஆட்சி நடத்தல் வேண்டும் என்பதாம். நான்முகன் ஆதலால் எட்டுக் கண்கள்உடையான் ஆயினன். ‘ஓர்’ அசை. உ (அம்மா) மா. (வேண்டாம்) அம்மா வேண்டாம் என்று சொல்லியபடியால்உமா என்று பெயராயிற்று என்பர். உமா, உமை என வந்தது, அமைச்சர் - அமாத்தியர்; அருகிருந்து ஆவன சொல்வார். ‘உழையிருந்தான்’ எனப் பெயர் உரைப்பர் திருவள்ளுவர், (குறள். 638.) ‘ஏ’காரம் ஈற்றசை. 23 |