பரதன் தாயைக் கடிந்து பேசுதல்  

2147.வாய் ஒளி மழுங்க, தன் மலர்ந்த தாமரை
ஆய் மலர் நயனங்கள் அருவி சோர்தர,
 ‘தீ எரி செவியில் வைத்தனைய தீய சொல்,
நீ அலது உரைசெய நினைப்பார்களோ?;’ என்றான்

     (பரதன் தேறி) தன் வாய் ஒளி மழுங்க - தன் முகவொளி  மங்கிப்
போகவும்; மலர்ந்த தாமரை ஆய் மலர் நயனங்கள் - அன்றலர்ந்த
தாமரையின் ஆராய்ந்த அழகுமலர் ஆகியகண்கள்; அருவி சோர்தர -
நீரை அருவியாகச் சொரியவும்; (தாயை நோக்கி) ‘செவியில் - காதுகளில்;
எரிதீ வைத்த அனைய தீய சொல் - எரிகின்ற நெருப்பைவைத்தது
போன்ற கொடுஞ் சொற்களை; உரைசெய - பேசுதற்கு; நீ அலது - நீ
அல்லாமல்;  நினைப்பரோ? - (பிறர்) நினைப்பார்களோ?;’ என்றான்-.

     கைகேயியின் கல்நெஞ்சு ‘வருத்தல் நீ’ என்ற (2145) உரையால்
வெளிப்படுதலின், நீ அலதுபிறர் உரைசெய்ய நினையவும் மாட்டார்;
பேசுவது எங்ஙனம் என்றான். கைகேயிநினைத்ததோடன்றிப் பேசவும்
செய்தனள் என்ற அவள் கொடுமையை ‘நினைப்பரோ’ என்ற பரதன்வினா
புலப்படுத்தியது. ‘ஓ’ வினாப்பொருட்டு; ‘நினையார்’ என்பது  விடை.     46