2169. | பாதங்கள் பெயர்தொறும், பாரும் மேருவும், போதம் கொள் நெடுந் தனிப் பொரு இல் கூம்பொடு, மாதங்கம் வரு கலம் மறுகி, கால் பொர, ஓதம் கொள் கடலினின்று உலைவ போன்றவே. |
பாதங்கள் - (சினங்கொண்ட பரதனது) கால்கள்; பெயர்தொறும் - தரையில் மாறிமாறி வைக்கப்படுந்தோறும்; பாரும் மேருவும் - மண்ணும் மேரு மலையும்; மாதங்கம் வரு கலம் -யானையை ஏற்றிவருகிற மரக்கலம்; கால் பொர - (கழற்)காற்று மோத; போதம் கொள் - கலத்தைச் செலுத்தும் அறிவைத் தன்பாற் கொண்ட; தனி நெடும் பொரு இல் கூம்பொடு - தனித்த நீண்ட ஒப்பற்ற பாய்மரத்துடனே; மறுகி- சுழன்று; ஓதம் கொள் கடலினின்று - நீர்ப்பெருக்கைக் கொண்ட கடலிலிருந்து; உலைவ போன்ற - தடுமாறி வருந்துவ போன்ற. யானை யேற்றிய கலம் பாய்மரத்தோடு காற்றால் கடலில் நிலைதடுமாறல், மேருமலையோடும கூடியபூமி பரதன் பாதம் பெயர நிலைதடுமாறலுக்கு உவமை ஆயிற்று. யானை - மேரு, மரக்கலம் - பூமி, பரதன் பாதம் - பாய்மரம் என ஒப்புரைக்க. கப்பலைத் திசையறிந்து காற்றின் போக்கறிந்து செலுத்துவது பாய்மரம் ஆதலின் “போதங் கொள் கூம்பு” என்றார். 68 |