2182. | ‘உய்யா நின்றேன் இன்னமும்; என்முன் உடன் வந்தான், கை ஆர் கல்லைப் புல் அடகு உண்ண, கலம் ஏந்தி, வெய்யோன் நான் இன் சாலியின் வெண் சோறு, அமுது என்ன, நெய்யோடு உண்ண நின்றது, நின்றார் நினையாரோ? |
‘என்முன் உடன் வந்தான்- எனக்கு மூத்தவனும் உடன் பிறந்த சகோதரனும் ஆகிய இராமன்; கை ஆர் கல்லை -கையில் பொருந்திய இலையாகிய கலத்தில்; புல் அடகு உண்ண - அற்பமான இலை உணவை உண்டுகொண்டிருக்க; இன்னமும்-; வெய்யோன் நான் - கொடியவனாகிய நான்; உய்யாநின்றேன் - உயிர் பிழைத்திருக்கின்றேன்; (அம்மட்டோ) கலம் - நல்ல பாத்திரத்திலே(உண்கலத்திலே) இன் சாலியின் வெண்சோறு - இனிய உயர்ந்த நெல்லின் வெள்ளியசோற்றை; நெய்யோடு- நெய்யுடன்; அமுதென்ன - தேவரமுதம் என்னும்படி; ஏந்தி - சுமந்து; உண்ண நின்றது - உண்ணும்படி இருந்து கொண்டுள்ளதை; நின்றார் - அருகில் காண நிற்கும் உலகோர்; நினையாரோ? - என்னை இழிவாகக் கருதமாட்டாரோ?’ உயிருடன் இருப்பதே உலகம் தூற்றப் போதும்; அதன்மேல் உண்கலத்தில் சோறும் நெய்யும் அமுதென உண்ண நிற்றல் உலகோர் பழி தூற்ற மேலும்வாய்ப்பன்றோ என்று தன்னைத் தானே நொந்துகொள்கிறான். ‘ஓ’ வினாப்பொருள். கை ஆர்கல்லை - கையாகிய பாத்திரம் எனவும் ஆம். கல்லை - இலை முதலியவற்றைக் குழித்து உண்னுதற்காகச் செய்த பாத்திரம்; தொன்னை. இராமன் காட்டிலே இலை முதலியவற்றை உண்டுகொண்டு எப்படியிருக்கிறானோ என்று அவன்பால் கொண்ட அன்பிரக்கமும் காண்க. 2391: |