2185.‘கொன்றேன்,  நான் என் தந்தையை,
     மற்று உன் கொலை வாயால் -
ஒன்றோ? கானத்து அண்ணலை
     உய்த்தேன்; உலகு ஆள்வான்
நின்றேன்; என்றால், நின் பிழை
     உண்டோ? பழி உண்டோ?
என்றேனும் தான் என் பழி
     மாயும் இடம் உண்டோ?

    ‘நான்-;  உன் கொலை வாயால்- உன்னுடைய கொலைத் தன்மை
படைத்த வாய்ச் சொல்லைக் கொண்டு; என் தந்தையைக்கொன்றேன் -
என் தந்தையாகிய தயரதனைக் கொன்றுவிட்டேன்; ஒன்றோ?-அம்மட்டோ;
மற்று- மேலும்; அண்ணலை- தலைமையும் பெருமையும் சிறந்த இராமனை;
கானத்து  உய்த்தேன் - காட்டின் கண் அனுப்பிவிட்டேன், (இவ்வளவையும்
உன்வாய்ச்சொல் மூலம் செய்துவிட்டு); உலகு ஆள்வான் நின்றேன் -
இவ்வயோத்திஅரசை ஆள்வதற்குத் தயாராக இருக்கின்றேன்; என்றால்-;
நின் பிழை உண்டோ
- உன்குற்றம் ஏதேனும் உள்ளதோ?; பழி
உண்டோ
- உன்மேல் பழி ஏதேனும் உள்ளதோ? (எல்லாக் குற்றமும்,
எல்லாப் பிழையும் என்மேல்தான்); என் பழி மாயும் இடம் - என்பழி
அழிந்து போகுமிடம்; என்றேனும் தான் உண்டோ? - என்றைக்காவது
உண்டா? (என்றும்இல்லை.)’

     கைகேயி செய்தன அனைத்தும் தான் செய்தனவாகக் கூறினான்;
செய்ததால் விளைந்த பயனாயஅரசை இவன் ஏற்பவனாக இருக்கும்
நிலைபற்றி,  தன்னை நோக்கித்தான் இவ்வளவும் நடந்ததாகஉலகம் அறிந்து
தூற்றும் என்று பரதன் வருந்துவது  இப்பாட்டில் கூறியவற்றின் கருத்தாகும்.
‘என்பழி’ என்றது.  ‘என்பிழை என்பதற்கும் பொருந்தும்.             84