பரதன் கைகேயிக்கு இறுதியாகக் கூறிய அறிவுரை  

2188.‘சிறந்தார் சொல்லும்நல் உரை
     சொன்னேன்; செயல் எல்லாம்
மறந்தாய் செய்தாய் ஆகுதி;
     மாயா உயிர் தன்னைத்
துறந்தாய் ஆகின் தூயையும்
     ஆதி; உலகத்தே
பிறந்தாய் ஆதி; ஈது அலது இல்லைப்
     பிறிது’ என்றான்.

    ‘சிறந்தார்-அறிவாற் சிறந்த சான்றோர்;  சொல்லும்  நல் உரை
சொன்னேன் - சொல்லுகின்றநல்ல மொழிகளை உனக்கு எடுத்துச்
சொன்னேன்; செயல் எல்லாம் - (இதுகாறும் நீ செய்த)செயல்கள்
எல்லாவற்றையும்; மறந்தாய் செய்தாய் ஆகுதி - (புத்தித் தெளிவோடு
அன்றி)நினைவின்றிச் செய்தவளாவாயாக; (இவ்வாறு கருதுவது மன்னிப்புப்
பெற வாய்ப்பாகும்); மாயாஉயிர்தன்னை - அழியாதிருக்கின்ற உன்னுடைய
உயிரை; துறந்தாய் ஆகில் -விட்டுவிட்டாயானால்;  தூயையும் ஆதி -
தூய்மை உடையவளாகவும் உலகால் கருதப் படுவாய்;உலகத்தே பிறந்தாய்
ஆதி
- உலகிற் பிறந்ததனால் வரும் பயனைப் பெற்றவளாகவும்ஆவாய்;
ஈது அலது  பிறிது இல்லை
- இது வல்லது  உன் பழி தீர வேறு வழி
எதுவும் இல்லை;’என்றான் - என்று கூறி முடித்தான். (பரதன்).

     ‘நான் புத்தியில்லாமல் செய்துவிட்டேன்’ என்று சொல். எனவே,
இனிமேல் உன் எண்ணம்புத்தியோடு மாறவேண்டும் என்றான். இறந்து
போனால் பெரிதும் பாராட்டடப்படுவாய்; நீபிறந்ததற்கும் ஒரு பொருள்
இருக்கும். இரண்டு வழிகளில் ஏதேனும் ஒன்றைத் தேர்ந்துகொண்டு
அதன்படி செய்த என்றான் பரதன். ஒருவேளை பரதன் அறிவுரை
கைகேயியால் ஏற்றுக்கொள்ளப்பெற்றது எனக் கருதலாம். இதன் பின்னர்க்
கைகேயி காவியத்தில் உரை நிகழ்த்தவில்லை என்பது காண்க.          87