பரதன் கோசலையின் திருவடி வணங்கச் செல்லுதல்  

கலிவிருத்தம்

2189.இன்னணம், இனையன இயம்பி, ‘யானும், இப்
பன்ன அருங் கொடு மனப் பாவிபாடு இரேன்;
துன்ன அருந் துயர் கெட, தூய கோசலை
பொன் அடி தொழுவேன்’ என்று, எழுந்து போயினான்.

     இனையன - இத்தகைய சொற்களை (பரதன்);  இன்னணம் இயம்பி -
இவ்வாறுவிளங்கவுரைத்து; ‘யானும் -;  இப்பன்ன அருங் கொடு மனப்
பாவிபாடு இரேன்
- இந்தப்பேசுதற்கு முடியாத கொடிய மனம்படைத்த
பாவியாகிய கைகேயியின் பக்கலில் இனி இருக்க மாட்டேன்;துன்ன
அருந்துயர் கெட
- நெருங்குதற்கரிய துன்பம் நீங்க; தூய கோசலை -
நன்மனம் படைத்த கோசலைத் தாயின்; பொன் அடி தொழுவேன் -
பொலிவு நிறைந்ததிருவடிகளை வணங்குவேன்;’ என்று - என்ற சொல்லி;
எழுந்து போயினான்-கைகேயியின் இடத்திலிருந்த புறப்பட்டுச் சென்றான்.

     வான்மீகத்தில் - பரதனது  புலம்பல் ஒலியைக் கேட்டுக் கோசலை,
சுமித்திரைபால் ‘மகா’புத்திமானாகிய பரதன் வந்திருத்தலால் அவனைக்
காண விரும்புகிறேன்’ என்று சொல்லிச்சுமித்திரையுடன் பரதன்
இருக்குமிடத்திற்குப் புறப்பட்டனன். அப்போது பரதன் சத்துருக்கனனுடன்
கோசலை இருக்கும் வீட்டிற்கு வந்தான் என்றுள்ளது.                  88