2195.‘வாள்தொடு தானையான் வானில் வைகிட,
காடு ஒரு தலைமகன் எய்த, கண் இலா
நாடு ஒரு துயரிடை நைவதே’ எனும் -
தாள் தொடு தடக் கை அத் தருமமே அனான்.

    தாள்தொடு தடக்கை அத்தருமமே அனான்- முழந்தாளைத்
தொடுமாறு நீண்ட கைகளை உடைய முழுமுதலாகிய அறத்தினைப் போன்ற
பரதன்;  ‘வாள் தொடு தானையான் - வாள் ஏந்திய சேனைகளை உடைய
தயரதன்; வானில் வைகிட- வானுலகத்தில் தங்கியிருக்க; ஒரு தலைமகன்-
அவனது (அரசுக்குரிய);  ஒப்பற்றமூத்த மகன்;  காடு எய்த - காட்டை
அடைய, (அரசு புரிவார் இன்மையால்); கண்இலா நாடு - துன்பம்
நீக்குதற்குரிய களைகண் ஆனவரைப் பெறாத நாடு; துயரிடை -
துன்பத்தில்பட்டு;  நைவதே - வருந்துவதே;  எனும் - என்று சொல்லிப்
புலம்பும்.

     தயரதனும் இராமனும் நாட்டிற்குக் கண் போல்வார் ஆதலின் அவரை
இழந்த நாடு ‘கண் இலாநாடு’ ஆம். முழந்தாள் அளவு நீண்ட கை
அரசர்க்குரிய உத்தம இலக்கணம். ‘தாழ்தடக் கைகளே’(2104) என்றதை
இங்கு ஒப்புநோக்குக.                                           94