2200. | ‘குரவரை, மகளிரை, வாளின் கொன்றுளோன், புரவலன் தன்னொடும் அமரில் புக்கு உடன் விரவலர் வெரிநிடை விழிக்க, மீண்டுளோன், இரவலர் அரு நிதி எறிந்து வௌவினோன், |
குரவரை- ஐம்பெருங் குரவரை; மகளிரை - பெண்களை; வாளின் கொன்றுளோன் - வாளால் கொலைசெய்தவன்; புரவலன் தன்னொடும் - அரசனோடும்; அமரில் புக்கு- போர்க்களத்துக்குச் சென்று; உடன்- உடனே; விரவலர் வெரிநிடை விழிக்க - பகைவர்கள் தன்முதுகிடத்தைக் காண; மீண்டுளோன் - திரும்பி ஓடிவந்தவன்; இரவலர் -ஏற்றுண்பாரது; அருநிதி - அரிதாகச் சேமித்த செல்வத்தை; எறிந்து வௌவினேன் - அவர்களை அடித்துக் கைப்பற்றிக் கொண்டவன்... ஐம்பெருங்குரவர் ஆவார் - தந்தை, தாய், தம்முன், அரசன் ஆசிரியன் என்போர்.(ஆசாரக். 16) குரவர் - ஆசிரியர் என்று ‘குரு’ வை மட்டும் கூறுதலும் உண்டு. போர்க்கு அரசனுடன்சென்று புறமுதுகிட்டு ஓடிவந்து அரசனைக் கைவிட்டவன். இவனை வள்ளுவர் ‘அமரகத்து ஆற்றறுக்கும்கல்லாமா அன்னார்’ என்று சொல்வர் (குறள். 814.). 99 |