2208.‘எஃகு எறி செருமுகத்து ஏற்ற தெவ்வருக்கு
ஒஃகினன், உயிர் வளர்த்து உண்ணும் ஆசையான்,
அஃகல் இல் அறநெறி ஆக்கியோன் பொருள்
வெஃகிய மன்னன், வீழ் நரகின் வீழ்க, யான்.

     ‘எஃகு எறி செருமுகத்து - ஆயுதங்களை வீசிப் போர்செய்யும்
போர்க்களத்து’ ஏற்ற தெவ்வருக்கு ஒஃகினன் - எதிர்த்துப் போர் புரியும்
பகைவர்களுக்கு எதிரே (தானும்போர் செய்யாமல் உயிராசையால்)
வணங்கியவன்; உயிர் வளர்த்து உண்ணும் ஆசையால் - உயிரை உடலில்
நிலைபெறச்செய்து நெடுநாள் வாழ்ந்து அனுபவிக்க வேண்டும் என்கின்ற
ஆசையாலே;அஃகம் இல் அறநெறி ஆக்கியோன் பொருள் வெஃகிய
மன்னன்
- சுருங்குதல் இல்லாத பெரியஅறவழியில் பொருள் சேர்த்தவனது
பொருளைப் (பேராசைப்பட்டு) கைப்பற்றிக் கொண்ட அரசன்; வீழ் நரகின்
யான் வீழ்க
- விழுகின்ற நரகத்தில் யானும் வீழ்வேனாக.’

     ‘உயிர் வளர்த்து  உண்ணும் ஆசையால்’ என்பதனை இடைநிலைத்
தீவகமாகக் கொண்டு, ‘எஃகு எறி செருமுகத்து’ என்பதன் முன்னும் கூட்டிப்
பொருள் செய்யலாம். -இது இடைநிலை விளக்கணி என்றும்,  தாப்பிசைப்
பொருள்கோள் என்றும் கூறப்பெறும்.‘கொள்பொருள் வெஃகிக் குடி
அலைக்கும் வேந்தன்” (திரிகடுகம் 50) எனக் கூறுவர் இம்மன்னனை.    107