2210.‘தஞ்சு என ஒதுங்கினர் தனது பார் உளோர்
எஞ்சல் இல் மறுக்கினோடு இரியல் போயுற,
வஞ்சி சென்று இறுத்தவன் வாகை மீக் கொள
அஞ்சின மன்னவன் ஆக யானுமே.

     யான் -; தஞ்சு என ஒதுங்கினர் தனது பார் உளோர் - (நீயே
எமது) அடைக்கலம்எம்மைப் பாதுகாக்க என்ற தன்னிடத்தில் வந்து
அடைந்த தன் குடிமக்கள்; எஞ்சல் இல்மறுக்கினோடு- குறைதல் இல்லாத
(அதிக) மனக் கலக்கத்தோடு;  இரியல் போய் உற- கெட்டு ஓடும்படியாக;
வஞ்சி சென்று இறுத்தவன் - வஞ்சி மாலை புனைந்து மண்ணாசை
காரணமாகப்படை எடுத்துத் (தன் எல்லையில்) தங்கிய பகை அரசன்;
வாகை மீக் கொள - வெற்றிமேற்கொண்டு ஆரவாரம் செய்ய; அஞ்சின
மன்னவன்
- அப்பகைவனோடு தன் உயிர் உள்ளதுணையும் தன்
மக்களைக் காப்பாற்றப் போர் செய்யாமல் பயந்த அரசன்; ஆக -
(செல்லுகின்ற தீய கதியில்) செல்வேனாக.

     வஞ்சி - மண்ணாசைகாரணமாகப் படை எடுத்துச் சென்று பகைவர்
நாட்டு எல்லையில் தங்கிச் செய்யும் போர்ப் பகுதி. வஞ்சி என்பது
மேற்சேறல் எனப்பெறும்.அதற்கு வஞ்சிப்பூச் சூடுதல் உரித்து. வாகை -
வெற்றி; வெற்றி
பெற்றோர்வாகைப்பூச் சூடுவர் - ‘வாகைப்பூவை
மேல்சூடிக்கொள்ள’ எனலும் ஆம். யானும், ‘உம்’ எச்சவும்மை.
சிறப்பும்மை ஆகலும் ஆம்.                                    109