2211.‘கன்னியை அழி செயக் கருதினோன், குரு
பன்னியை நோக்கினோன், பருகினோன் நறை,
பொன் இகழ் களவினில் பொருந்தினோன் எனும்
இன்னவர் உறு கதி என்னது ஆகவே.

    ‘கன்னியை - திருமணம் ஆகாத கன்னிப்பெண்ணை; அழிசெயக்
கருதினோன் - கற்பழித்துக் கெடுத்தல்செய்ய நினைத்தவன்;
குருபன்னியை நோக்கினோன் - ஆசான் மனைவியைத் தீய கருத்துடன்
பார்த்தவன்; நறை பருகினோன்  - கள் உண்டவன்; இகழ் களவினில் -
(எல்லாராலும்) இகழப்படுகின்ற களவினால்; பொன் பொருத்தினோன் -
பொன்னைச்சேர்த்தவன்; எனும் இன்னவர் - என்கின்ற (நால்வராய)
இவர்கள்; உறு -அடைகின்ற; கதி - (நரக) கதி; என்னது ஆக -
எனக்குரியது  ஆகுக.’

     ‘கன்னி’ என்பதற்குப் பூப்பு எய்தாத பெண் எனலும் ஆம்.
பெண்களைப் பூப்பு எய்தும் முன்னரேதிருமணம் செய்வித்தல் அக்கால
வழக்கம். ‘ஏ’  ஈற்றசை.                                       110