2213.‘மறு இல் தொல் குலங்களை மாசு இட்டு ஏற்றினோன்,
சிறு விலை எளியவர் உணவு சிந்தினோன்,
நறியன அயலவர் நாவில் நீர் வர
உறு பதம் நுங்கிய ஒருவன், ஆக யான்.*

     ‘யான் -;  மறு இல் தொல் குலங்களை - குற்றம் சிறிதும் அற்ற
பழமையான குலங்களை; மாசு இட்டு ஏற்றினோன் - குற்றம் உள்ளவை
என்று குற்றம் கற்பித்து (அதனை உலகம் நம்புமாறுசெய்து  குலக்) கேடு
சூழ்ந்தவன்; சிறுவிலை - பஞ்ச காலத்தில்; எளியவர் -ஏழை எளிய
மக்களது; உணவு - அற்ப உணவை; சிந்தினோன் - சிதறப் பண்ணியவன்;
அயலவர் நாவில் நீர்வர - பார்த்துக் கொண்டிருக்கின்ற பக்கல் உள்ளவர்
நாக்கில்நீர்ஊறும்படி; (அவர்களுக்குக் கொடாமல்) நறியன உறுபதம் -
நறுமணம் உள்ள நல்லசிறந்த உணவை; நுங்கிய - தானே விழுங்கிய;
ஒருவன் -; ஆக - (இம் மூவரும்செல்லும் தீய கதியில்) செல்வேனாக.’

     விலை மிகுந்து பொருள் குறைவது பஞ்சகாலத்தில். அதனால், சிறு
விலைக் காலம் என்று பஞ்சகாலத்தைச் சொல்வர். உணவைச் சிந்துவதே
பாவம்; அதனினும் எளியவர்உணவைச் சிதறுதல் பெரும்பாவம் ஆகும். 112