பரதனின் துயர் மிகுதி 2232. | ‘துறந்து போயினான் நந்தை; தோன்றல்! நீ பிறந்து, பேர் அறம் பிழைத்தது’ என்றபோது, இறந்து போயினான்; இருந்தது, ஆண்டு, அது மறந்து வேறு ஒரு மைந்தன் ஆம் கொலாம். |
(வசிட்டன்) ‘தோன்றல்! - பரதனே!; நீ பிறந்து பேர் அறம் பிழைத்தது- நீ பிறந்ததனால் பெரிதாகிய (அரசகுலத்து) அறம் தவறிவிட்டது (மூத்தவன் இருக்க இளையவனாகியநீ வரத்தால் அரசு பெற்றமையால்); நுந்தை துறந்து போயினான் - (அதனால்)உன்தந்தையாகிய தயரதன் உன்னை (மகனல்லன் என்று) துறந்து இறந்தான்; என்ற போது - என்று சொல்லிய போது; இறந்து போயினான் - (பரதன்) இறந்து போனான்; ஆண்டு இருந்ததுஅது - அவ்விடத்தில் (பரதன்) இருப்பதாகிய அத்தோற்றம் காண்பது; மறந்து - தன்தன்மை கெட்டு; வேறொரு மைந்தன் ஆம் கொலாம் - வேறு ஒரு மகனாக இருக்கும் போலும். வசிட்டன் சொற்கேட்ட அளவில் பரதன் இறந்து போனான்; இருக்கின்றவன் பரதன் அன்றோஎனின்? அன்று; இவன் வேறு ஒரு மகன்; அவனும் தன் தன்மை திரிந்து பரதனைப்போல உருவம்கொண்டுள்ளான் போலும் என்றவாறாயிற்று. பரதனது துயர் மிகுதி பற்றி இங்ஙனம் கூறினார். ‘கொல்’ ஐயப்பொருளில் வந்தது. 131 |