2236. | ‘துன்னு தாள் வளம் சுமந்த தாழையில் பன்னு வான் குலைப் பதடி ஆயினேன்; என்னை! என்னையே ஈன்று காத்த என் அன்னையார் எனக்கு அழகு செய்தவா!’ |
துன்னு தாள் வளம் சுமந்த தாழையில்- நெருங்கிய வளப்பமான அடிமரத்தை உடைய தென்னையின்; பன்னு வான்குலை - பலராலும் பாராட்டப் பெறுகின்ற இறந்த குலையில்; பதடி ஆயினேன் - உள்ளொன்றும் இல்லாத வெறுங்காயாக ஆனேன்; என்னையே ஈன்று காத்த என் அன்னையார் - என்னைச் சுமந்து பெற்றுவளர்த்த என் தாயார்; எனக்கு அழகு செய்தவா - எனக்கு நன்மை செய்தவாறு; என்னையே - என்ன அழகாயிருக்கிறது கண்டீர்களோ?’ தாழை என்பதற்குத் தென்னை என்பது நேர்பொருள் ‘பதடி’ என்பது மக்களுக்குப் பயன்படும்பொருள் அற்ற நெல், தேங்காய் முதலியவற்றைக் குறிக்கும் உள்ளீடு இல்லாத தேங்காயைஊமைக்காய் என்பர். 135 |